மதுரையில் சட்டம் ஒழுங்கு என்னாச்சு...? சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை...! - மக்கள் அதிர்ச்சி...!
What law and order situation Madurai boy brutally murdered People shocked
மதுரையின் இதயப்பகுதியில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் இன்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த வாகன காப்பக வளாகத்தில் 17 வயதுடைய குபேந்திரன் என்ற சிறுவன் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், உறக்கத்தில் இருந்த சிறுவனை அரிவாள் உள்ளிட்ட கொலைவெறி ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வெறிச்செயலில் பலத்த காயமடைந்த குபேந்திரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள், முத்துமணி என்ற இளைஞர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சித்திரை திருவிழா நேரத்தில் குபேந்திரனுக்கும் முத்துமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக முன்விரோதம் உருவாகியிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலைச் சம்பவத்தை முத்துமணி அரங்கேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழந்த குபேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
What law and order situation Madurai boy brutally murdered People shocked