மனைவிக்கு மது கொடுத்து, சூடு வைத்து மாந்திரீக பூஜை...! கேரளாவில் கணவன் உள்பட 3 பேர் கைது!
kerala Witchcraft woman attack Arrest
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டிக்குன்னல் பகுதியை சேர்ந்த தாஸ் (55) என்பவரின் மகன் அகில் (26), தன்னுடைய காதலியுடன் திருமணம் செய்து கொண்டு பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். சமீபத்தில் அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தீயசக்திகளின் தாக்கமாக நம்பிய அகிலின் குடும்பத்தினர், பத்தினம்திட்டா பெரும்துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அணுகினர்.
அவர், “சில மாந்திரீக பூஜைகள் செய்தால் நலம் திரும்பும்” என்று கூறியதால், குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் மந்திரவாதி வீட்டுக்கு வந்து சுமார் 10 மணி நேரம் பூஜை செய்தார். அதன் போது இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமரவைத்து, வலுக்கட்டாயமாக மது குடிக்கச் செய்ததுடன் பீடி சாம்பலை விழுங்கச் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், உடலின் பல பகுதிகளில் தீயால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் பெண்ணின் தந்தை அவரை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, மகள் தன்னிடம் நடந்த கொடுமையை தெரிவிக்க, உடனே போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அகில், அவரது தந்தை தாஸ் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இதே சம்பவத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தேடிவருகின்றனர்.
English Summary
kerala Witchcraft woman attack Arrest