காதல் திருமணம் செய்த மகளுக்கு கொடூர தண்டனை...! - தற்கொலை போல நாடகம் ஆடிய தந்தை கைது...!
Cruel punishment daughter who married love Father arrested staging suicide
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா பகுதியில் வசித்து வந்த வியாபாரி சந்திர சீனுவின் குடும்பத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகள் சவுடேஸ்வரி (22), பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வருகை தந்த நாகராஜ் என்ற இளைஞருடன் பழகியதன் மூலம் காதலில் விழுந்தார். காலப்போக்கில் இந்த உறவு வலுப்பெற்று, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.ஆனால் இந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், அரசு பள்ளி ஆசிரியருடன் சவுடேஸ்வரிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை ஏற்க மறுத்த அவர், வீட்டை விட்டு வெளியேறி நாகராஜை திருமணம் செய்து கொண்டார்.இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்றும், வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மாயமாகியுள்ளன என்றும் அவரது தந்தை காவலர்களிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் நாகராஜ் மற்றும் சவுடேஸ்வரியை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, “நான் அணிந்திருந்த உடையுடன், காதில் இருந்த கம்மலை கூட கழற்றி விட்டு தான் வெளியேறினேன்” என சவுடேஸ்வரி விளக்கம் அளித்தும், அவரது தந்தை அதை ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, ஐந்து நாட்கள் தந்தையின் வீட்டில் தங்கி பின்னர் கணவர் வீட்டுக்கு செல்லுமாறு காவலர்கள் அறிவுறுத்தினர்.
அதன் படி, சவுடேஸ்வரி தந்தையுடன் சென்றார். ஆனால் கடந்த மாதம் 19ஆம் தேதி, அவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், இது தற்கொலை அல்ல, கொலை என்பது உறுதியாகியது. இதனால் சந்தேகம் கூடிய நிலையில், காவலர்கள் தந்தை சந்திர சீனுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தலையணையால் மூச்சுத்திணறச் செய்து தனது மகளை கொலை செய்து, அதை தற்கொலை போல காட்ட முயன்றது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சந்திர சீனுவை காவலர்கள் கைது செய்தனர்.
மேலும், தனது மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழை இளைஞரை காதல் திருமணம் செய்ததையே காரணமாகக் கொண்டு இந்த ஆணவக்கொலை நடைபெற்றதாகவும், இதில் ஒரு காவல் அதிகாரி உடந்தையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அதிகாரி குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cruel punishment daughter who married love Father arrested staging suicide