இனி இவர்களுக்கு வங்கிகளில் கடன் கிடையாது - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!
Reserve bank loan issue
வங்கிகளின் நிர்வாகிகள், பங்குதாரர்கள், அதிகாரிகள் தங்கள் உறவினர்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி, அதில் பலவும் வாராக்கடனாக மாறுவதால் பொதுமக்களின் பணம் ஆபத்தில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு தடைவிதிக்க ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை கொண்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவை வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
அதன்படி, வங்கியின் இயக்குனர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள், மேலும் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு நேரடியாக கடன் வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட முடிவெடுக்கும் கூட்டங்களில் பங்கேற்க இயலாது. அதேபோல் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்குவதற்கும் உச்சவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெரிய வங்கிகள் (சொத்து ரூ.10 லட்சம் கோடிக்கு மேல்) அதிகபட்சம் ரூ.50 கோடி வரை கடன் தரலாம். நடுத்தர வங்கிகள் ரூ.10 கோடி, சிறிய வங்கிகள் ரூ.5 கோடி, உள்ளூர் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடி, என்பிஎப்சிகள் ரூ.10 கோடி, பிற நிதி நிறுவனங்கள் ரூ.50 கோடி வரை வழங்கலாம்.
இத்தகைய கடன்களின் விவரங்களை வங்கிகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஆண்டுதோறும், நிதி அறிக்கைகளில் உறவினர்களுக்கு வழங்கிய கடன்களின் நிலை மற்றும் வாராக்கடனாக மாறிய விவரங்களை வெளியிட வேண்டும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, தேவைப்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கே பொருந்தும். பொதுமக்களின் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன் போன்றவற்றுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.