"தோட்டம் துரவு எல்லாம் இருக்கு" என்று சொல்வதைக் கேட்டிருப்போம்...! தோட்டம் சரி அது என்ன துரவு?
ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து அவருக்குத் தோட்டம் துரவு எல்லாம் இருக்கு என்று சொல்வதைக் கேட்டிருப்போம். தோட்டம் சரி அது என்ன துரவு..?
பெரிய அளவில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுதான் துரவு. இன்று துரவு என்ற சொல்லையே நாம் துறந்துவிட்டோம்.
இதன் நீள அகலம் 1:1, 1:2, 1:3 என்ற விகிதத்தில் அமைய வேண்டும் என விளக்குகிறார் கொடுமுடி ச. சண்முகம். கிணறு தோண்டுதல் முதலிய கட்டுமானங்களை விளக்கும் ‘மயமதம்’ எனும் ஒரு பொறியியல் நூல் நம்மிடம் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.
அகலமான கிணறுகள் மட்டுமன்றி ஆழமான கிணறுகளும் நம்மிடம் இருந்தன. ‘நெடுங் கிணற்று வல் ஊற்று உவரி தோணி’ – (97-98) என்கிற பெரும்பாணாற்றுப்படை வரி, தொண்டை மண்டலத்தில் ஆழமாகத் தோண்டப்பட்ட கிணற்றைப் பற்றிக் கூறுகிறது.
இதேபோல் கிணறு வெட்டும் ஆடவர்கள் தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி பாலை நிலத்தில் கிணறு தோண்டியிருந்த காட்சியை ‘வன்புலம் துமியப் போகிக்…’ என அகநானூறு (79:6) விவரிக்கிறது.
ஆனால் இவ்விரு பாடலுமே ஒரே செய்தியை தெரிவிக்கின்றன. இப்படித் தோண்டப்பட்ட கிணற்றில் உவர்நீர்தான் கிடைத்தது என்பதே அது.
இது பாறையின் தன்மையினால் ஆனது. இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிக வறண்ட பகுதிகளில் ‘காராளன் கிணறு’ என்றழைக்கப்படும் பாசனக் கிணறுகள் உள்ளன.