மணல் சாப்பிடும் கடலூர் மாவட்ட மக்களின் பரிதாபநிலை..!
மணல் சாப்பிடும் கடலூர் மாவட்ட மக்களின் பரிதாபநிலை..!
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மணல் சாப்பிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் என்னும் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மேலும் இந்த கிராமத்தை சுற்றி கோமங்கலம், பரவளூர், கச்சிபெருமாநத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன.இவை அனைத்தும் மணிமுத்தாற்றின் கரையோரம் அமைந்துள்ளன.அப்பகுதியைச் சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவரும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக போதுமான மழையில்லாத காரணத்தினாலும் மணிமுத்தாற்றில் தண்ணீர் வற்றிய காரணத்தினாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவருகிறது. இச்சூழ்நிலையில், மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனை பொருட்படுத்தாத அதிகாரிகள் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,மணல் குவாரி திறப்பதற்காக விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராதேவி, சீனுவாசன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊராட்சித்துறை அதிகாரிகள் பலர் வந்து ஆய்வு செய்தனர்.இந்த தகவலறிந்து திரண்டுவந்த கிராம மக்கள், அதிகாரிகளை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களின் கார்களின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
மேலும் போராட்டத்தின் உச்சகட்டமாக மக்கள் அனைவரும் அதிகாரிகளின் முன்பு வாழை இலையைப் போட்டு, அதில் மணலை வைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.இதனை கண்ட அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள்,எங்கள் பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் ஆற்றில் உள்ள மணலை சுரண்டிச் சென்றால், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறையும். அப்போது எங்களால் விவசாயம் செய்ய முடியாமல் போகும். ஆகையால், இப்போதே நாங்கள் மண்ணைத் தின்று பசியாற்றி பழகிக்கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, போராட்டம் நடத்திய மக்களை அழைத்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் சமாதான செய்தனர். மேலும் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்யலாம் என கூறிச் சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
English Summary
village people protest against quarry sand