தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
two days rain for tamil nadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்கள் முன்பு லேசான மழை பெய்தது. நேற்று முன் நாள் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஆனால் பிற்பகல் வரையிலும் மழை பெய்யவில்லை.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவிவருகிறது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுவை, மரக்காணம், சீர்காழி, செய்யூர், மகாபலிபுரம், திண்டிவனம், வேதாரண்யம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழைபதிவாகி உள்ளது.
English Summary
two days rain for tamil nadu