இன்னும் எத்தனை உயிர்களை நரபலி வாங்க உள்ளதோ இந்த நீட் பூதம் .,தொடரும் மரணங்கள்.,அழியும் மருத்துவ கனவு ..!
தொடரும் மரணங்கள்.,அழியும் மருத்துவ கனவு ..!
‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதியை சேர்ந்தவர்கள் பாபு ,வசந்தி தம்பதியினர்.
மேலும் பாபு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியனாகவும், வசந்தி மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.இவர்களுடைய மகன் அருண்பிரசாத்.
அருண்பிரசாத் கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் அவர் 1,200-க்கு 1,150 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதையடுத்து மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வை எழுதினார். ஆனால் அந்த தேர்வில் அருண்பிரசாத் தேர்ச்சி பெறாததால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஓராண்டாக சென்னையில் தங்கி, அங்குள்ள ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘நீட்’ தேர்வை அருண்பிரசாத் எழுதினார்.
இந்த நிலையில் நேற்று ‘நீட்’ தேர்வு வினா- விடைகள் வெளியானது. தொடர்ந்து அருண்பிரசாத் தான் எழுதிய விடைகளை சரிபார்த்துள்ளார்.
இதில் கணக்கு பாடத்தில் சரியான விடை அளிக்காததால் மனமுடைந்த அருண் தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று கூறி புலம்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அருண்பிரசாத், தன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே மதியம் வீட்டுக்கு வந்த தாய் வசந்தி, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த தன் மகன் அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
the student suicide for fear of failure in neet exam