"தடுத்திட – தவிர்த்திட - தகர்த்திட" ஸ்டாலின் எழுதிய அந்த கடித்ததால் உச்சகட்ட உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!!  - Seithipunal
Seithipunal


விருதுநகரில் வரும் மார்ச் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் திமுக பேரணிக்கு அழைப்பு விடுக்கும் நோக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "போர் முரசு ஒலிக்கின்ற நாள்தான், நாட்டையும் மக்களையும் நாள்தோறும் காக்கும் வீரனுக்கு நல்ல நாள், திருநாள். திமுகவின் கோடிக்கணக்கான செயல் வீரர்கள் அந்தத் திருநாளுக்காகக் கண் இமைக்காமல் காத்திருக்கிறார்கள். ஜனநாயகக் களம் தயாராகிவிட்டது. வெற்றி ஒன்றேதான் நமக்கு இலக்கு. இந்த வெற்றி நமக்கானதல்ல, தமிழ்நாட்டுக்கு, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தியத் திருநாட்டுக்கு.

5 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியின் கொடுங்கோண்மை ஆட்சியில் நாடு பட்ட பாட்டிலிருந்து மீட்கவும், அந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, இன்று அவர்களுடனேயே கூட்டணி கண்டுள்ள அதிமுக ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மானத்தை மீட்டு, அதல பாதாளத்திலிருந்து விடுவிக்கவும் ஜனநாயகக் களமான மக்களவைத் தேர்தல், திமுக செயல்வீரர்களைப் பட்டாளத்துச் சிப்பாய்களாக மாற்றியிருக்கிறது.

அண்ணா கண்ட பேரியக்கம்; தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த கொள்கைப் பட்டாளமாம் திமுக; தனது தூய லட்சியப் பாதையில் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகிவிட்டது. மத்தியிலும் - மாநிலத்திலும் நடந்திடும் அநியாய - அவல ஆட்சி தொடர்ந்திடாமல் தடுத்திட – தவிர்த்திட - தகர்த்திட – இனி எக்காலத்திலும் எத்தர் கூட்டம் நம் தாய்நாட்டு மக்களை ஏமாளிகளாக்காமல் காத்திட, இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி வீரமிகு விருதுநகரில் மார்ச் 6 ஆம் நாள் நடைபெறவிருக்கிறது.

மார்ச் என்ற ஆங்கிலத் சொல்லுக்கு வீறுநடை என்பதே பொருளாகும். ஆறு போல பெருக்கெடுக்கும் வீறுநடையை மார்ச் 6-ல் விருதுநகரில் காட்டிடவும், அதனை வெற்றி நடையாக மாற்றிடவும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளை நான் அன்புடன் அழைக்கிறேன்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்… உங்களை முன்னால் விட்டு பின்னால் வருபவன் அல்ல நான்! உங்களோடு ஒருவனாக - உங்களில் ஒருவனாக -உங்களால் ஒருவனாக - உயிர் மூச்சான திமுகவின் தலைமைப் பொறுப்பை தோள் மீது சுமந்து, தலைவர் கருணாநிதியிடமிருந்து பெற்ற ஜனநாயக நெறிமுறைகளின் வெளிச்சத்தில் பயணிக்கிறேன். விருதுநகரில் உங்களையும் என்னையும் வரவேற்றிட, விருதுநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், விருதுநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தங்கம் தென்னரசுவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் மக்கள் விரோத பாசிச மத்திய அரசையும் - அதனிடம் மண்டியிட்டு மாநிலத்தின் உரிமைகளை அடகுவைத்த மாநில அரசையும் ஒரு சேர எதிர்க்கும் உணர்வும் வல்லமையும் கொண்ட ஒரே இயக்கமான திமுக, தனது தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர் பேரணி அமையப் போகிறது.

பேரணி என்ற சொல்லே திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்ட பிறகு, நடைபெற்ற கழக மாநாடுகளில் தான் அறிமுகமானது. அதுவரை ஊர்வலமாக இருந்ததைப் பேரணியாக மாற்றிய பெருமை இளைஞரணியினருக்கு உண்டு. இப்போது இளைஞரணியினர் மட்டுமல்ல, திமுகவின் அனைத்து அமைப்புகளையும் சார்ந்த தொண்டர்களுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நம்மைவிட ஆவலாகவும், வேகமாகவும் இருக்கும் பொதுமக்களும் பங்கேற்கும் பெரும்பேரணியை விருதுநகர் தனது வரலாற்றுப் பக்கங்களில் மார்ச் 6 ஆம் நாள் பதிய வைக்கப் போகிறது.

அண்ணா கண்ட இயக்கம்; "குணாளா, குலக் கொழுந்தே" என்று அண்ணாவினால் பாசம்பொங்க அழைக்கப்பட்ட, காமராஜரைத் தந்த விருதுநகரில் கூடுகிறது. காலத்தின் தேவை கருதி - நாட்டின் நலனில் அக்கறை கொண்டு திமுகவும் காங்கிரஸும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற - சிறுபான்மை நலன் காக்கின்ற - ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் பாதுகாக்கின்ற - யாரையும் ஒதுக்கி வைக்காத, எல்லோருக்குமான - சமத்துவத்தை வலியுறுத்துகிற - கொள்கைக் கூட்டணி; மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி.

எதிர்ப்புறம் இருப்பவர்களைப் பாருங்கள்! மிரட்டலுக்குப் பயந்து கூனிக் குறுகி கூட்டணி சேர்ந்தவர்கள், நேற்று வரை நாராச நடையில் விமர்சித்துவிட்டு இன்று மனசாட்சியை விற்றுவிட்டு அதற்கொரு விலை வைத்து கூட்டணி கண்டவர்கள், எது பற்றியும் கவலையின்றி சுயநல எதிர்பார்ப்புகளையே முதலீடாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் என ஒட்டுமொத்த மக்கள் விரோதக் கூட்டமும் ஒன்று சேர்ந்து வரிசையாக நிற்கிறது. தங்களை விற்றுக்கொண்டதுபோல மக்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பணநாயக மமதையை ஜனநாயக ஆயுதம் கொண்டு விரட்டிட, ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திட, வெற்றிக்கு கட்டியம் கூறிட விருதுநகரில் திரண்டிடுவோம்! நாம் தேர்தல் நேரத்தில் மட்டும் கூடுபவர்கள் அல்லர். தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதைப் போல், நாம் கூடிக் கலையும் காகங்கள் அல்ல; கூடிப் பொழியும் மேகங்கள். எப்போதும் மக்கள் பக்கமே நிற்போம்; மக்களைச் சுற்றியே வருவோம். மாநாடுகள் கூட்டி கொள்கை முழக்கம் செய்திடுவோம்.

அப்படித்தான், 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21, 22 தேதிகளில் தென்மண்டல திமுக மாநாடு இதே விருதுநகரில் நடைபெற்றது. இப்போது போலவே அப்போதும் மக்களவைத் தேர்தல் நேரம். தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற தருணம். அந்த பரபரப்பான சூழலிலும் திமுகவின் தென்மண்டல மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் திமுகவின் ஆற்றல் மிகு பேச்சாளர்கள் கொள்கை முழக்கம் செய்தனர். திமுகவின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சிறப்புரை ஆற்ற, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதி மாநாட்டு நிறைவுப் பேருரை ஆற்றினார்.

அந்த மகத்தான தென் மண்டல மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வென்று, நாட்டின் வரலாற்றில் சாதனைப் பொன்னேட்டை இணைத்தது. அப்போதும் மாநிலத்தை ஆட்சி செய்த அதிமுகவும், மத்தியில் ஆட்சி செய்த பாஜகவும் இப்போது போலவே கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது தமிழ்நாட்டு மக்கள் எப்படி நாற்பது தொகுதிகளிலும் இரண்டு ஆட்சியாளர்களையும் வீழ்த்தி, மத்தியில் ஆட்சி மாற்றத்தையும் அதனைத் தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தையும் உருவாக்கிக் காட்டினார்களோ, அதே வரலாறு இந்த மக்களவைத் தேர்தலிலும் உறுதியாகத் திரும்பும்.

உடன்பிறப்புகளே, ஒன்று கூடிடுவோம்! விருதுநகரில் ஒலிக்கப்போகும் ஜனநாயகப் போர் முரசம் - நாற்பது தொகுதிகளுக்குமான வீர முரசம், அதுவே வெற்றி முரசம்" என, ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த பேரணி குறித்து திமுக தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவரும் உற்சாகத்தில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin invites viruthunagar Dmk meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->