'எங்களை பார்த்து எல்லோரும் பயந்து போய் உள்ளனர்' கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினின் அடுத்தடுத்து பேச்சினால், அதிமுகவினர் அதிருப்தி!!
stalin grama sabha kootam
தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளில், திமுக கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறது. இதில் மாவட்ட வாரியாக சில ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மக்களிடம் கருது கேட்கின்றார்.
அவ்வாறு, இன்று கரூர் மாவட்டத்தில் இரண்டு ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரவக்குறிச்சி ஈசநத்தம் கிராமத்தில், இன்று காலை திமுக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அவர் பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்று கொண்டார்.
பின்னர் அங்குள்ள மக்களிடம், " உங்கள் பிரச்சனைகளை, குறைகளை, எண்ணங்களை புரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சிக்கும், மோடி தலைமையில் நடைபெறும் மத்திய பாசிச, மதவாத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு வருவது போல் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். பக்தர்களுக்கு புனித இடம் கோவில் என்றால் எங்களுக்கு கிராமங்கள் தான் புனித ஸ்தலம்.
இங்கிருந்துதான் அரசியல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது வாக்குப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போது தமிழகம் முழுவதும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 17-ந்தேதிக்குள் அனைத்து கூட்டங்களும் முடிக்கப்பட்டு விடும்.
இந்த ஊராட்சி சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் அதிர்ந்துபோய் உள்ளனர். இதனால் அப்பட்டமாக பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் துணை முதல்வராக இருக்கும்போது கிராமங்களுக்கு செல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12,617 கிராமங்களுக்கும், நூலகம் கொண்டு வந்தேன்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வளர்ச்சி பணிகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு சேலத்தை தவிர வேறு எந்த ஊராவது தெரியுமா? ஜெயலலிதா செல்வாக்கால் ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கவலையில்லை. கமிஷன், ஊழல், வசூல் என்ற நிலையில்தான் அவர்கள் உள்ளனர். விரைவில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
stalin grama sabha kootam