மதுரை பைப் வெடிகுண்டு! அத்வானியின் யாத்திரை! அன்று நடந்ததை நினைவு கூர்ந்த சசிகலா! - Seithipunal
Seithipunal



பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு விகே சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "எல்.கே.அத்வானி துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். பா.ஜ.கவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். எல்.கே.அத்வானி அவர்கள் தனது 14வது வயதிலேயே பொது சேவைகளில் தன்னை  அர்ப்பணித்துக்கொண்டவர். இந்திய ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவர். மேலும், இந்திய தேசத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி அவர்களுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது  அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது எல்.கே.அத்வானி மிகுந்த அன்பையும், மாறாப்பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் எல்.கே.அத்வானி அவர்கள் மீது அளவு கடந்த நட்பினை கொண்டிருந்தார். 

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 'துக்ளக்' தமிழ் வார இதழின் 42-வது ஆண்டு விழாவில்"  எல்.கே.அத்வானி “புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒரு இயற்கையான கூட்டாளியை நாங்கள் காண்கிறோம்," என்று பேசியதை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். 

மேலும், மதுரை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் எல்.கே.அத்வானி அவர்களின் ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அன்றைய தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டை உடனடியாக அகற்றி, பெரும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது. 

இதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எல்.கே.அத்வானி அவர்கள் நன்றி தெரிவித்ததையும் எண்ணிப்பார்க்கிறேன். அதேபோன்று, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றதற்காக, திரு.எல்.கே.அத்வானி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததையும் இந்நேரத்தில் மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

மேலும், திரு.எல்.கே.அத்வானி அவர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்ததையும், அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்ததையும் இந்நேரத்தில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், மகிழ்ச்சியோடும், நூறாண்டுகளை கடந்தும், பெருவாழ்வு வாழ வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்"  என்று சசிகலா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Wish to LK Advani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->