என்னை வேலை செய்யச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது - ஆவேசத்தின் உச்சியில் தமிழிசை.!
puthuchery governor tamilisai soundar rajan press meet in chennai
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளது. தற்பொழுது இந்த மாவட்டங்களில் மழை ஓய்ந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது. இந்த வெள்ளம் பாதித்த பகுதிகளை அரசியல் தலைவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மழை வெள்ளத்தைக் கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. இங்குள்ள திராவிட மாடல், திண்டாடும் மாடலாக மாறி உள்ளது என்றுக் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக நேற்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகளைப் பார்வையிட வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பட்டப்பட்டது.
அதற்கு அவர், "பாண்டிச்சேரியினுடைய ஆளுநர் வேலையை அந்த அம்மாவைப் பார்க்கச் சொல்லுங்கள். பாஜகவினுடைய செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இருக்கின்ற பணியை முதலில் அவர்களைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று காட்டமாக பேசியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "என்னை வேலை செய்யச் சொல்ல சேகர்பாபுவுக்கு உரிமை இல்லை. அவர்கள் வேலையை, அவர்கள் சரியாகப் பார்த்தால் நான் ஏன் இங்கு வந்து வேலை சொல்லப் போகிறேன். தென்மாவட்டங்களில் நான் சென்று பார்த்தவரை இந்த பேரிடரில் மாநில அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. இதை சொன்னவுடன் தான் அண்ணன் சேகர்பாபுவுக்கு கோபம் வருகிறது. நான் சென்று வேலையைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.
துரத்தி அடிப்பேன் என்று சொல்கிறார். இதெல்லாம் நடக்கவே நடக்காது. என்னைப் பொருத்தவரை நான் பாஜகவின் செய்தி தொடர்பாளராகப் பேசுகிறேன் என்று சொல்கிறார். இல்லை நான் மக்களுடைய செய்தி தொடர்பாளராகப் பேசினேன், நிச்சயமாகப் பேசுவேன். ஏனென்றால் அங்கு அந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று விமர்சித்தால், அது குறித்து அவர் பதில் அளிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு, நான் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்று கூறுவது தேவையற்றது. தமிழ்நாட்டில் எனக்கு வேலை இருக்கிறது, நான் அதில் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
English Summary
puthuchery governor tamilisai soundar rajan press meet in chennai