வள்ளலாரின் சத்திய ஞான சபை, கடவுளை மனித உடலோடு தொடர்புபடுத்தி உணர வைக்கும் அதிசயம்!!
vadalur vallalar temple
கடலூர் மாவட்டம் வடலூர், சத்திய ஞான சபையில் முதன்முதலாக 1872 சனவரி 25 வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கப்பட்டு இன்று வரை ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்பட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது. மேலும், மிக்கபெரிய அளவில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஆன்மஜோதியை உணர முடியாமல் தடுக்கும், இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு சத்திய ஞான சபையின் உட்புறத்தில் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரணுபவமாய் அருளை உணரும் போது தான் இறைவனை காணலாம் என இந்த வாயில்களும், ஜன்னல்களும் திறக்கப்படும் பொழுது நாம் உணரலாம்.
இறைவன் இருக்கும் நிலையை உலகுக்கு எடுத்து காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார். ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும்.
அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிற்சபை என்பது நமது புருவமத்தியாகும். சிற்சபை = சிற்+சபை சிற் என்றால் அறிவு என்றும், சபை என்றால் விளங்கும் இடம் என்றும் பொருள் படும். ஆக சிற்சபை என்பது அறிவு விளங்கும் இடம் ஆகும். இதைப் புறத்தில் எடுத்துக் காட்டவே வள்ளலார் சத்திய ஞான சபையினுள் மேற்புறத்தில் பளபளக்கும் வெள்ளி ஒளியொடு விளங்கும் சிற்சபை ஒன்றை அமைத்துள்ளார்.
பொற்சபையில் இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்துக்காட்டவே சத்திய ஞான சபையினுள் கீழ்ப்புறத்தில் பொன்னிற வண்ணத்தில் பொற்சபை ஒன்றை அமைத்துள்ளார். பொற்சபை என்பது அண்டத்தில் சூரியனைக் குறிக்கும்.
சத்திய ஞானசபையைச் சுற்றி இரும்புச்சங்கிலி வளையமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு நமது மூக்குத்துவாரத்தை ஒத்திருக்கிறது. அது நமது ஒரு நாளைய சுவாசம் 21600-ஜ உணர்த்துகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இந்த இரும்புச் சங்கிலி துருப்பிடிக்காமல் உள்ளது.
சத்திய ஞானசபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஏனெனில் தெற்குத் திசை என்பது சாகாக்கலையும் நித்தியதேகத்தையும் பெறுவதற்கு ஏற்ற திசை ஆகும். தெற்கு பாகம் அக்கினிப்பிரகாசம் உடையது. அதனால் ஞானசித்தியை கொடுக்கும் திசையாகும். இதை குறிக்கும் பொருட்டே சத்திய ஞானசபையை தெற்கு நோக்கி அமைத்துள்ளார்.