மக்களவை தேர்தலுக்கான பாமகவின் அதிரடி வியூகம்! ஒரு வார செயல்திட்டத்தை வெளியிட்டார் மருத்துவர் இராமதாசு! - Seithipunal
Seithipunal


அக்டோபர் 1 முதல் மாவட்ட பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்களை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணைப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

அக்டோபர் ஒன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கான நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து  ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மிக முக்கியமாக வாக்குச்சாவடி களப்பணியாளர் நியமனம், களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணித்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

அக்டோபர் 2 ஆம் நாள் திங்கள்கிழமை அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 3 ஆம் நாள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் அக்டோபர் 4 ஆம் நாள் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவரவர் கிராமங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அக்டோபர் 5 ஆம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

அக்டோபர் 8 ஆம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான செயல் திட்டங்கள், வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணித் திட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK planning to face Lok Sabha election 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->