டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் திடீர் கைது : அதிரடியில் இறங்கிய காவல்துறையினர்!
டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் திடீர் கைது
டி.டி.வி.தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்ட விழா நடத்த அனுமதி அளிக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரிடம் அனுமதி கோரி இருந்தார்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கெங்கமேடு சாலையில் மேம்பாலச்சுவர் மீது நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கான சுவர் விளம்பரம் செய்ய செந்தில்பாலாஜி முயற்சித்துள்ளார்.
ஆனால் இந்தத்தகவலை அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆட்கள் அங்கு கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் கெங்கமேடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனினும் எம்.ஜி.ஆர் விழாவிற்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்காததை கண்டித்து செந்தில் பாலாஜி இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.
அனுமதியின்றி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் செந்தில் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்தனர்.
English Summary
dinakaran supporter arrested