வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து - 3000 ஜவுளி கடைகள் எரிந்து நாசம்
3000 shops destroyed as fire engulf the bazaar in Bangladesh
இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் பங்காபஜார் சந்தையில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஆடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் எதிர்பாராத விதமாக சந்தையில் பற்றிய தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் மளமளவென வேகமாக பரவியது.
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். மேலும் சுமார் ஆறு மணி நேரம் போராடி நேற்று மாலை தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக பங்காபஜார் கடை உரிமையாளர்கள் சங்க அதிகாரி கூறும்பொழுது, குறைந்தது 3000 கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது என்றும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் தொடர்பான எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3000 shops destroyed as fire engulf the bazaar in Bangladesh