போதைக்காக பெட்ரோல், எஞ்சின் ஆயில்களை திருடி குடிக்கும் சிறார்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் எதிர்கால தூண்களாக பல முன்னோடிகளால் வர்ணிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், இன்று என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது. எந்த ஒரு குற்றத்தை எடுத்துக்கொண்டாலும் அல்லது உடலுக்கு தீமை விளைவிக்கும் புகை, மதுபழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளவர்களின் விபரங்களை கேட்டால், அதில் குறிப்பிட்ட அளவு பெரும்பான்மையாக இளைஞர்கள், இளம் வயதுள்ள நபர்கள் இருக்கிறார்கள். உலகத்திலேயே அதிகளவு இளைஞர்களை கொண்ட இந்திய நாட்டின் சாபக்கேடோ இது?. 

ஆம்.. மறுப்பு சொல்ல முடியாத உண்மை தான் அது. இன்றுள்ள சிறார்கள் யாரை பார்த்தாலும் வாயில் புகை, கையில் பாட்டில் என்று தான் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இவ்வாறாக உடல்நலத்தை கெடுத்து இருக்கும் குழந்தைகளின் உண்மை முகத்தை கூட பல பெற்றோர்கள் அறியாமல், தனது பிள்ளை எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவன் என்று எண்ணி பிள்ளைகள் மேல் அதிகளவு பாசம் வைத்து வருகிறார்கள். 

கஞ்சா, மது போதை, புகைபிடித்தல் மற்றும் இன்னும் பல வஸ்துக்கள் என தங்களின் உடல் நலத்தை தங்களை அறியாமலேயே கெடுத்துக்கொண்டு வருகின்றனர். இதில், அறிவுரை கூற வேண்டிய பக்குவத்தில் இருக்கும் பல இளைஞர்களும், அவர்களை விட வயது குறைந்த சிறார்களை போதை பொருட்களை வாங்க அனுப்பி வைப்பது, அவர்களையும் அந்த போதை பழக்கத்திற்கு அடிமையாக்குவது என்று இருந்து வருகின்றனர். 

ஒரு காலங்களில் அமைதியாக இருந்த ஊர் மற்றும் தெரு பகுதி இன்று இதுபோன்ற சமூக பொறுப்பு நலன் இல்லாத இளைஞர்களால் வெறும் 3 முதல் 5 வருடத்திற்குள் பெரும் அழிவை சந்தித்து, அப்பகுதியை சார்ந்த சிறார்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. உண்மை தான் அப்படி ஒரு செய்தியை தான் நாம் காணப்போகிறோம். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்தின் கீழ் வரும் பகுதியில் அமைந்துள்ளது இ.எஸ்.ஐ காலனி பின்புறம் அமைந்துள்ள நெசவாளர் காலனி மற்றும் வெங்கடேச பெருமாள் கோவில் பகுதிகள். இந்த பகுதி சஞ்சீவி மலைக்கு கீழ், கண்மாய்க்கு மிக அருகில் அமைந்துள்ள பகுதியாக இருக்கும் நிலையில், இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் ஒரு காலத்தில் அப்பகுதியில் மரங்கள் நட்டுவைத்து, கண்மாயை பராமரிப்பது, விழாக்காலங்களில் மக்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு மேடைகள் அமைத்து பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். 

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மேற்கூறிய சீரழிவு வெறும் 2 முதல் 3 வருடங்களில் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் சுமார் 5 வருடத்திற்கு முன்னர் வரை போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்தாலும், தனிமையான இடத்திற்கு சென்று மது அருந்திவிட்டு வீடுகளில் வந்து அமைதியாக இருப்பார்கள். ஆனால், இன்றோ அந்நிலை மாறி வீதிகளில் அமர்ந்தே மதுபானம் அருந்துவது, கஞ்சா புகைப்பது, இன்னும் பல போதை வஸ்துக்கள் உபயோகம் செய்வது என இருந்து வருகிறார்கள். 

அன்றைய காலத்தில் சிறார்களை கண்டித்த இளைஞர்கள், இன்று அவர்களை போதை வஸ்துக்களை வாங்கி வர அனுப்பி வைக்கின்றனர். மேலும், கடந்த வருடம் வரை மதுபானம் வாங்க இரயில்வே  தண்டவாளம் அருகே உள்ள முக்கிய பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது இந்த பகுதிக்கு அடுத்தபடியாக தமிழக அரசு அமைத்துள்ள மதுபான கடையில் மதுபானத்தை வாங்கி அருந்திவிட்டு போதையில் திரிந்து வருகின்றனர். 

இவ்வாறாக இளைஞர்களால் சீரழிந்த சிறார்கள், மதுபானம் மற்றும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள், இதனைத்தவிர்த்து போதை தரும் மற்றொரு வாஸ்து (பொதுநலன் கருதி அதன் பெயர் குறிப்பிடவில்லை) போன்றவற்றை உபயோகம் செய்து போதை பற்றவிலை என்று கூறி பெட்ரோல் மற்றும் இரு சக்கர வாகனத்தில் இருக்கும் ஆயிலை திருடி குடித்து வருவதாகவும் அப்பகுதியை சார்ந்த ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவரிடம் முழுமையாக கேட்கையில், " இளம் வயதுள்ள சிறார்கள் தாங்கள் பழகிய போதை பொருட்கள் மூலமாக கிடைக்கும் போதை போதவில்லை என்று கூறி பெட்ரோல் மற்றும் இருசக்கர வாகனத்தில் உள்ள ஆயிலை திருடி குறித்து வருகிறார்கள். கடந்த வாரம் இப்படியாக 2 சிறுவர்கள் பெட்ரோலை திருடி குடிப்பதை பார்த்த 2 பேர், 2 சிறாரையும் அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டில் விட்டு, அவர்களின் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்து வந்தார்கள். 

சிறுவர்களுக்கு போதைப்பழக்கத்தை கற்றுக்கொடுத்த இளைஞர்களை கேட்க இங்கு யாருக்கும் வீரம் இல்லையோ என்னவோ, எனது பிள்ளை பாதிக்கப்படவில்லை என்று நான் அமைதியாக இருக்கிறேன். யாருக்கும் சென்று நல்லதை செய்தால் கூட, இந்த உலகம் நம்மை கெட்டவர் போல முதலில் பார்க்கிறது. பின்னர் நிலைமை உணர்ந்து, அந்த சிறார் முழுவதுமாக பாதிக்கப்பட்டு நிலைமை கையை விட்டு சென்றதும் நம்மிடம் வந்து புலம்புகிறார்கள். என்ன செய்வது? " என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டியது பெட்ரோல் அல்லது எஞ்சினில் ஊற்றப்படும் ஆயிலால் போதை வருமா என்பது தான். உண்மையில் பெட்ரோல் மற்றும் எஞ்சின் ஆயிலால் போதை என்பது வராது. அதனால் உங்களின் ஆயுள் கட்டாயம் குறையும் என்பதே நிதர்சனம். பெட்ரோல் மற்றும் எஞ்சின் ஆயில் போன்றவற்றை குடித்தால், அதில் உள்ள வேதிப்பொருள் உடலில் கலந்து உடலுக்கு ஒருவிதமான கிறக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை சிறார்கள் போதை என எண்ணிக்கொண்டு இருப்பது தான் அறியாமையின் சோகம். 

இதுபோன்ற செயல் தொடர்ந்து கொண்டு வந்தால், சிறார்கள் கட்டாயம் வெகு சில மாதங்களுக்கு உள்ளாகவோ அல்லது வருடங்களுக்கு உள்ளாகவோ இறப்பை தழுவிவிடுவார்கள் என்பது தான் நிதர்சனம். பெட்ரோலை குடித்ததும் அதில் உள்ள கெமிக்கல் ஒரு விதமான கிறக்கத்தை ஏற்படுத்தி போதை போல சிறார்களுக்கு காண்பிக்கிறது. மேற்கூறிய பிரச்சனை எங்கோ ஒரு ஊரில் நடந்ததாக இருந்தாலும், இதனை தடுக்காவிடில் நாளை மற்றொரு இடத்தில் இறப்பை கூட நிகழ்த்தலாம். 

சிறார்கள் இளம் வயதிலேயே கேடான பாதைக்கு செல்லாத வகையில் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வது, அப்படி பாதிக்கப்பட்டால் அவர்களை எப்படி மீட்டெடுப்பது என்பது தான் இனி வரும் காலத்தின் பெரும் பணியாக இருக்கும். பெற்றோர்கள் உங்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனியுங்கள். அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள். 

பிள்ளைகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் இளைஞர்கள் மீது பாரபட்சமின்றி காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் அல்லது அவர்களின் வீட்டில் கூறி இளைஞரை கண்டிக்க வையுங்கள். எதற்கும் இளைஞர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில், இளைஞர்களுக்கு எதிரான சட்டத்தை நீங்கள் கையில் எடுத்து, உயிருக்கு சேதாரம் இல்லாமல் நடுரோட்டில் குடை தடுக்கி விழ வைத்தாலும், அதனால் 4 சிறார்கள் திருந்துவார்கள் என்றால் இளைஞர்கள் ரோட்டில் தவறி விழுவது தவறே இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்.

கொரோனா காலக்கட்டத்தில் போதைக்காக சானிடைசரில் நீர் ஊற்றி குடித்தும் இங்கு பலரும் பலியாகியுள்ளார்கள். அதனால் சுதாரித்து செயற்படுங்கள். பெட்ரோல் என்பது போதை வஸ்து கிடையாது. இளைஞர்கள் மற்றும் சிறார்களை நல்வழிப்படுத்தும் கடமை அவர்களை பயிற்றுவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் தவிர்த்து பெற்றோர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் உள்ளது என்பதை அறிந்து அதிகாரிகளும் சற்று செயல்பட தொடங்கினால் நல்லது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Rajapalayam ESI Colony Youngster Addict Drugs and Drink Petrol Shocking News


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->