மதவெறி அரசியலுக்கு தக்க பாடம்! காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கொண்டாடிய வைகோ!
vaiko Wish Karnataka Congress
கர்நாடக மாநில தேர்தலில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்து இருக்கின்றது.
2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கர்நாடக மக்கள் பாஜகவை வீழ்த்தினார்கள். மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.
ஆனால், பாஜக குதிரைப் பேரம் நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆளுநர் துணையோடு குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.
கர்நாடகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கிய ஆர்எஸ்எஸ் இந்துத்துவ சக்திகள், சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.
இஸ்லாமிய மக்களின் பண்பாட்டு உரிமைகளைப் பறித்தன.இந்துவத்துவ சோதனைச் சாலையாக மாற்றப்பட்ட கர்நாடகாவில், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது.
பாஜகவின் ஏதேச்சாதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள். இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை மலையாக நிருபித்து இருக்கிறது.
பாசிசத்தை வேரறுக்க கர்நாடகாவில் மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல, 2024 நாடாளுமன்றத்தேர்தலிலும் இந்தியா முழுவதும் நடக்கும். கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
vaiko Wish Karnataka Congress