தலைக்கேறிய போதை - சாலையில் ரகளையில் ஈடுபட்ட அமெரிக்க வாலிபர்கள் கைது.!
two american peoples arrested in chennai
சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் வெல்கர் உள்ளிட்ட இருவர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மது அருந்தி விட்டு நிதானம் இல்லாமல் அங்கிருந்த பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் மட்டும் ஜெமினி சிக்னல் அருகே ஆட்டோவில் இருந்து சாலையில் குதித்துள்ளார். இதையடுத்து அவர் அந்த வழியே நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் சிலர், அமெரிக்க இளைஞரை தாக்கி சாலையோர நடைபாதையில் அமர வைத்து விட்டு சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த அமெரிக்க இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ஆனால், ஆம்புலன்ஸில் ஏற மறுத்த அமெரிக்க நபர் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரையும் துரத்தி துரத்தி தாக்கியுள்ளார். உடனே போலீசார் இரண்டு அமெரிக்க வாலிபரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் அமெரிக்க இளைஞர்கள் இருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two american peoples arrested in chennai