திருப்பூர் : சாலை வசதி இல்லை, 4 மாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவினர்.!
Tirupur no road facility took a 4 month pregnant woman to the hospital
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சாலை வசதி, மின்சார வசதி மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாததால் அப்பகுதியினர் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் அப்பகுதியினர் நோயாளிகளை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் மனைவி சரண்யா, 4 மாத கர்ப்பிணியான இருக்கும் நிலையில் அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதியினர் சரண்யாவை தொட்டில் கட்டி கரடு முரடான மலைப்பாதையில் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மலைவாழ் மக்களின் நலன் கருதி குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Tirupur no road facility took a 4 month pregnant woman to the hospital