சிவகாசி || பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - தொழிலாளிகளின் நிலை என்ன?
three peoples injured for firecrackers explossion in sivakasi
சிவகாசி || பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - தொழிலாளிகளின் நிலை என்ன?
நாடு முழுவதும் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த வருடம் புதிய பட்டாசுகளை அறிமுகப்படுத்தவும் பட்டாசு நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.
அந்த வகையில், சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டி கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. மேலும், இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மூன்று பேரை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples injured for firecrackers explossion in sivakasi