தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்: வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்! எங்கு தெரியுமா?
Thoothukudi election boycott potalurani villagers
தூத்துக்குடி, பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு பொட்டலூரணி கிராமத்தில் ராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
அந்த பகுதியில் 1100 பேர் வாக்களிக்க தகுதியுடையவர். இந்த கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் செயல்படுவதால் அங்கிருந்து வெளியே துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப்புகை காரணமாக அந்த கிராமங்களில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த மீன் கழிவு ஆலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொட்டலூரணியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார்.
மேலும் வாக்களிக்க வருபவர்களுக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Thoothukudi election boycott potalurani villagers