நில வழிகாட்டி மதிப்பு உயர்வை திரும்ப பெற வேண்டும்..எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை!
The land guide must retrieve the increase in value Opposition leader Shiva warns
நில வழிகாட்டி மதிப்பு உயர்வை திரும்ப பெறாவிட்டால் கல்வீடு கட்ட மானியம் வழங்கும் திட்டம் முடங்கிவிடும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:அரசிடம் உள்ள வருவாய்க்கு ஏற்ப திட்டங்களை அறிவித்து, செயல்படுத்துவதே சிறந்த அரசாகும். யாரோ நிதி கொடுப்பார், மானியம் கொடுப்பார் என எதிர்பார்த்து திட்டங்களை அறிவித்துவிட்டு பின்னர் கொடுக்காததால் வருவாயை திரட்டுவது என்பது சிறந்த அரசாக இருக்காது.
அதுபோல் நம்மைச்சுற்றி உள்ள புரோக்கர்கள் சம்பாதித்தால் போதும் என்ற நோக்கில் வருவாயை உயர்த்த திட்டமிடுவதும் சரியாக இருக்காது. அரசின் கடைகோடியில் உள்ள ஏழை, எளிய சாதாரண குடிமகன் பாதிக்காத வகையில் வருவாய்க்கான திட்டங்களை தீட்டுவதே சிறந்த அரசாகவும் இருக்கும்.
ஆனால் இவை இரண்டையும் தற்போதைய புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., பாஜக கூட்டணி அரசு செய்யத்தவறிவிட்டது. யாரோ நிதி கொடுப்பார் என்று திட்டங்களை அறிவித்துவிட்டு தற்போது கிடைக்காததால் விரக்தியில் உள்ளார். நாம் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து, சட்டசபையை கூட்டி எதிர்பார்த்த இடத்தில் இருந்து நிதி கிடைக்கவில்லை, வருவாயை உயர்த்த ஆலோசனை கூறுங்கள் என்று மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்கவில்லை. மாறாக தன்னைச்சுற்றியுள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் அனைவரும் நில புரோக்கர்கள் நில வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டால் நமக்கு கமிஷன் வருவாய் அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அது சிறந்த யோசனையாக கூறினர். அதில் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுரை கூறினர். இதை முதல்வர் ரங்கசாமியும் உண்மை என்று நம்பி நில வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்திவிட்டார்.
தற்போது உயர்த்திய நிலவழிகாட்டி மதிப்பு உயர்வு என்பது ஏழைகளை கருத்தில் கொள்ளவில்லை. வசதி படைத்தவர்கள் மட்டுமே குறிப்பாக புரோக்கர்கள் மட்டுமே பயன்பெறுவர்.உண்மையில் புதுச்சேரியில் 40 சதவீத மக்கள் சொந்த வீடுகள் இல்லாமல் உள்ளனர். இதனால் அவர்கள் மனை வாங்குவதும், வீடுகள் கட்டுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நில வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதன் மூலம் வீடு கட்டும் மானியம் வழங்கும் திட்டமே கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு மனைவாங்கும்போது அரசுக்கு தரும் முத்திரைத்தாள் கட்டண வரியே திரும்ப ஏழை மக்களுக்கு வழங்குவதைப்போல் உள்ளது. மேலும் முத்திரைத்தாள் கட்டணம் கட்டி மனை வாங்கிய பின்னர் டெவலப்மென்ட் சார்ஜ் என்று தனியாக கட்ட வேண்டிய நிலையும் உள்ளது. அத்துடன் அங்கீகரிக்கப்படாத மனைகளில் இடம் வாங்கினாலும் அரசு வீடு கட்டுவதற்கு மானியம் தருவதில்லை. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு கானல் நீராகியுள்ளது.
புதுச்சேரி கிரமப்புறப்பகுதிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் நகரப்பகுதிகளில் ரூ.2000 முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பாதுவாகவே மனைகள் அரசின் வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல்விலைக்குத்தான் விற்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசே வழிகாட்டி மதிப்பை மனையின்விலையை விட பல மடங்கு உயர்த்திவிட்டதால் உரிமையாளர்களும், புரோக்கர்களும் மேலும் மனையின் விலையை உயர்த்தியே விற்பார்கள்.
இவ்வாறு கடுமையான விலை உயர்வின் மூலம் ஏழை ரூ.5 லட்சம் செலவிட்டால்கூட 800 சதுர அடி நிலம்கூட வாங்க முடியாது. ரூ.8000 முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்நாளில் சொந்தவீடு என்பதே இல்லாமல் போய்விடும். இதனால் கல்வீடு கட்ட மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்படும். கல்வீடு கட்டும் திட்டத்தில் ஏழைகள் பயன்பெற்றுவிட கூடாது என்பதற்காக திட்டமிட்டுத்தான் நில வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதை உணர்ந்தும் சிலர் முதல்வர் ரங்கசாமி ஆதரவு இருந்தால் தேர்தலில் சீட்டும், வெற்றியும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரது செயல்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். உண்மையில் தேர்தலில் வெற்றி பெற மக்களின் ஆதரவுதான் வேண்டும். மக்களின் ஆதரவு வேண்டும் என்றால் நில வழிகாட்டி மதிப்பு உயர்வை முதல்வர் ரங்கசாமி திரும்ப பெற வேண்டும். அதை செய்யாமல் தன்னைச்சுற்றி இருப்பவர்கள் கூறுவதே சரி, நமது உத்தரவைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று செயல்பட்டால் தேர்தலின்போது நில வழிகாட்டி மதிப்பை உயர்த்தியவர்களுக்கும், அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கும் மக்கள் தங்கள் வாக்கால் உத்தரவிட்டு பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.
English Summary
The land guide must retrieve the increase in value Opposition leader Shiva warns