தசரா திருவிழா இன்று நிறைவு..காப்பு களைந்து விரதத்தை முடிக்கும் பக்தர்கள்!
The Dussehra festival concludes today Devotees breaking their fast by offering sacrifices
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.வேடமணிந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடித்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் பக்தர்கள் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர். இதேபோல் ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கைகளை வசூலித்தனர்.
12 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது.
பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு அதிகாலை சுமார் 1 மணி அளவில் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர் சிதம்பரேசுவரர் கோவில் முன்பு அம்மன் எழுந்தருளினார்.
விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 8.45 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4.45 மணிக்கு அம்மன் சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
தொடர்ந்து 5 மணியளவில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டது. அப்போது கடும் விரதமிருந்து வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் நடக்கிறது. அத்துடன் தசரா திருவிழா நிறைவடைகிறது.
English Summary
The Dussehra festival concludes today Devotees breaking their fast by offering sacrifices