தொடர் விடுமுறை: தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
special bus run in tamilnadu
தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில், புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28-ம் தேதி 505 பேருந்து, மார்ச் 29-ம் தேதி 300 பேருந்து, மற்றும் மார்ச் 30-ம் தேதி 345 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 120 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- "மார்ச் 29 புனித வெள்ளி, மார்ச் 30 சனி மற்றும் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 505 பேருந்துகளும் நாளை மறுநாள் 300 பேருந்துகளும், மார்ச் 30 அன்று 345 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus run in tamilnadu