கடலூர் || நண்பர் மகளைக் கண்டித்த டாஸ்மாக் ஊழியர் - காதலர் செய்த கொடூரம்.!
petrol bomb attack to tasmac employee house in cuddalore
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அருகே கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டில் கடந்த 19-ந்தேதி இரவு 12.30 மணி அளவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், வீட்டுக்கதவு மற்றும் ஜன்னலில் இருந்த திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், நள்ளிரவில் 2 சிறுவர்கள் அந்த வழியாக சுற்றித்திரிந்ததும், அந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தன. இதையடுத்து, போலீசார் சந்தேகத்திற்குரிய இரண்டு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது. மேலும் கல்லூரி மாணவர், மோகனின் நண்பரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த மோகன், அந்த சிறுமியை கண்டித்துள்ளார். இதனை அந்த சிறுமி, கல்லூரி மாணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் சேர்ந்து மோகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி மாணவரையும், 16 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
English Summary
petrol bomb attack to tasmac employee house in cuddalore