நீலகிரி : கோவிலுக்கு சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.!
near neelagiri four womans died for lost floods
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் புகழ் பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
வனப்பகுதிக்கு நடுவில் அமைந்த இந்த கோவிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த ஆற்றை கடப்பதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.
இந்தக் கோவிலில் கார்த்திகை மாத தீப வழிபாடு நடைபெற்று வருகிறது. இதை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதன் படி, நேற்று மாலையும் அந்த கோவிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். வழிபாடு முடிந்து பக்தர்கள் வீட்டுக்கு புறப்படத் தயாரானார்கள்.
அதற்காக இந்த ஆற்றை கடக்கும்போது ஆற்றில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் அலறி அடித்து கொண்டு மீண்டும் கோவில் உள்ள ஆற்றங்கரைக்கு தப்பி ஓடினர். ஆனால் நான்கு பெண் பக்தர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றனர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவில்கரையில் நின்ற சுமார் 800 பேரை மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச்சென்ற பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நேற்று இரவு நேரம் அதிகமானதால், அவர்களை தேடும் பணி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வெள்ளத்தில் அடித்து சென்ற நான்கு பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு வெள்ளத்தில் சிக்கி மாயமான நான்கு பெண்களின் உடலை மீட்பு பணியினர் மீட்டனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி நான்கு பெண் பக்தர்கள் பலியான சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near neelagiri four womans died for lost floods