#சென்னை || எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்ம நபரால் பதற்றம்.!!
mysterious person poured paint on MGR statue in Chennai
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காளிங்கராயன் தெருவில் அமைந்திருந்த மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவ சிலை மீது மர்ம நபர்கள் சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் குவிந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த 1994ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. தினமும் இந்த சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பது வழக்கம்.
அதன்படி அதிமுகவினர் இன்று காலை வழக்கம் போல் மாலை அணிவிக்க வந்த போது எம்ஜிஆர் சிலையின் மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்த வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அதிமுகவின் மாநில மாநாடு மதுரையில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mysterious person poured paint on MGR statue in Chennai