மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இனி., புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.!
kovai lockdown new aug
கோவை மாவட்டத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்த காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு குறைக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மூன்றாவது அலையாக இருக்குமோ என்ற அச்சம் தொடங்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள இந்த நிலையில் தமிழகத்தின் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அந்தப்பகுதியை மூடவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில், சென்னை, திருச்சி மதுரை, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
* மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி, டீ கடை உள்ளிட்டவைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
* மீன் -இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
* மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
* சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு முழுவதுமாக தடை.
* அனைத்து ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை.
* பொள்ளாச்சியில் நாளை நடக்கும் மாட்டுச்சந்தை இயங்க தடை விதிக்கப்படுகிறது. நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.