ரேசன் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: சாம்பலாகிய பொங்கல் பரிசு பொருட்கள்!
Kanyakumari ration shop Sudden fire incident
கன்னியாகுமரி, திருத்தோபுரம் காக்கோட்டு விளை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகளை நேற்று ரேஷன் கடைகளில் வைத்து கடையை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர்.
இன்று அதிகாலை திடீரென ரேஷன் கடையில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ரேஷன் கடையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரேஷன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகப்புகள், வேட்டி, சேலைகள் என அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது.
ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து சேதம் ஆகிவிட்டது என உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக இன்று காலை பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வந்திருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
English Summary
Kanyakumari ration shop Sudden fire incident