ஜெபக்கூடம் கட்ட தடை: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! குமரியில் பரபரப்பு!
Kanyakumari prayer hall agitation public gathered collectors office
கன்னியாகுமரி, வாத்தியார்விளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்த போது பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக பொருட்கள் வந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடினர்.
மேலும் ஊர் தலைவர், இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் என அனைவரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கட்டுமான பணிகள் குறித்து இன்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனவும் அதுவரை பணிகள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், ஏற்கனவே ஜெபக்கூடம் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்றிரவு கட்டிடம் கட்டுவதற்காக பொருட்கள் வந்துள்ளன. இந்த செயலால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே கட்டிட பணியை உடனடியாக நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமானோர் ஜெபக்கூடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
English Summary
Kanyakumari prayer hall agitation public gathered collectors office