புத்தகங்களுக்கு பதில் மதுபாட்டில்...? பாளையங்கோட்டை பள்ளியில் நடந்தது என்ன...?
Instead books liquor bottles What happened school Palayamkottai
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் மாணவிகள், பள்ளி சீருடையில் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி சீருடையில் வட்டமாக அமர்ந்தபடி, பிளாஸ்டிக் டம்ளர்களில் மது ஊற்றி, அதில் தண்ணீர் கலந்து பரிமாறிக் கொள்வதும், ‘சியர்ஸ்’ செய்து குடிப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை மாணவிகளில் ஒருவரே செல்போனில் பதிவு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.இந்த வீடியோ தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடந்த வகுப்பறை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் பள்ளியைச் சேர்ந்தது என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிர்வாகம் நடத்திய விசாரணையில், மதுபானம் அருந்தியவர்கள் 9-ம் வகுப்பு மாணவிகள் என்பது தெரியவந்தது.
விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பள்ளி வளாகத்தில் காலியாக இருந்த வகுப்பறையிலேயே தற்காலிகமாக விடுதி செயல்பட்டு வந்ததாகவும், அதே நேரத்தில் மற்ற மாணவிகள் உணவு எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து கவுன்சிலிங் வழங்கியது.
அத்துடன், ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக 6 மாணவிகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் பெற்றோர்களிடையே கடும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்பதுடன், பள்ளி மாணவிகளுக்கு ரகசியமாக மதுபானம் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Instead books liquor bottles What happened school Palayamkottai