போராட்டத்திற்கு நடுவே வழக்கம் போல் இயங்கும் அரசு பேருந்துகள்..!!
government bus as usual run in tamilnadu
நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க.வின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ, உள்பட 13 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அரசு பேருந்துகள் முழு அளவில் இயங்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இருப்பினும், தமிழ்நாட்டில் இன்று அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணிந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட வேண்டும். வழக்கமான அட்டவணைப்படி பேருந்து சேவைகள் முழுமையாக இயங்குவதை மேலாண்மை இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டும்.
மேலாண்மை இயக்குநர்கள் உள்ளூர் போலீஸ் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பேருந்து பணிமனைகளுக்கும், பேருந்துகளுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து சேவைகள் இயக்கப்படும் விதம் குறித்து விவரங்களை நிர்வாக இயக்குனர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பேருந்துகளுக்கு போதுமான எரிபொருள் நிரப்பி பயணத்திற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
government bus as usual run in tamilnadu