விவசாய கிணற்றில் மிதந்த போர்வை.! திறந்து பார்த்த போது கண்ட விபரீதம்.!
Gang of robbers killed their friend
கொள்ளையடித்த பணத்தை, பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். இதுகுறித்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே விவசாய கிணறு ஒன்றில் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு கடந்த 18ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தீனா என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் 7 பேர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த பொழுது காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த கொலையை இவர்கள் 7 பேரும் செய்தது தெரியவந்துள்ளது. அரக்கோணம் பகுதியில் தீனா மற்றும் அவருடைய நண்பர்கள் கத்தியை காட்டி வழிப்பறி செய்து கொள்ளையடித்தும், சில வீடுகளில் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்தும் வந்துள்ளனர். இவர்கள் கொள்ளையடிக்கும் நகை பணம் என அனைத்தையும் சமமாக பங்கிட்டு எடுத்துக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் இவர்கள் திருத்தணியில் நடத்திய வழிப்பறியில் தீனாவுக்கு பங்கு கொடுக்கவில்லை. இதனால், தகராறு ஏற்பட்டதில் தீனாவை அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொலை செய்து போர்வையில் சுற்றி, கல்லை கட்டி கிணற்றில் வீசி இருக்கின்றனர். கல் அவிழ்ந்து கீழே விழுந்ததால் சடலம் மேலே மிதந்துள்ளது. இதனை அடுத்து, கொலையானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
English Summary
Gang of robbers killed their friend