மின்சார ரெயில்கள் ரத்து - சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு.!
extra bus run in chennai
சென்னையில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் படி இன்றும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால், பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதாவது, தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் இன்று 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்னக ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக காலை 10 மணி முதல் மதியம் 03:15 மணி வரை சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன".
அதன் படி இன்று பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் செல்வதற்கு 60 பேருந்துகளும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல் கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தி. நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதலாக இன்று இயக்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.