ரூ.1.8 லட்சம் மிரட்டல்...! கோவை அருகே பானிபூரி ஆசை காட்டி குழந்தை கடத்தல்…!- 3 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி மீட்பு
Extortion 1point8 lakh Child kidnapped near Coimbatore by luring promise pani puri Police swift rescue 3 hours
அசாம் மாநிலம் முரியாபரி மாவட்டம் முசினாபுரி பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்கிற அப்துல் ஹக் (29), அவரது மனைவி பர்பினா, ஐந்து வயது மகன் ஹூமாயூன் ஆகியோர் கடந்த ஒரு ஆண்டாக கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர்.
அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் அப்துல் ஹக் மற்றும் பர்பினா இருவரும் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.அதே தொழிற்சாலையில், அசாம் மாநிலம் குக்ரஜார் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது 5 நண்பர்களுடன் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வந்தான்.

இவர்களை அசாமில் இருந்து சொரிபுல் என்ற ஒப்பந்ததாரர் வேலைக்கு அழைத்து வந்ததாகவும், தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய சம்பளத்தை அவர் தொழிலாளர்களிடம் முறையாக கொடுக்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் உள்ளிட்ட 6 பேரும் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், சொரிபுல்லுடன் அப்துல் ஹக்கிற்கு பழக்கம் இருப்பது அந்த சிறுவனுக்குத் தெரியவந்தது. இதை வாய்ப்பாகக் கொண்டு, பணம் பறிப்பதற்காக அப்துல் ஹக்கின் மகன் ஹூமாயூனை கடத்த திட்டம் தீட்டினான்.
திட்டமிட்டபடி, பானிபூரி வாங்கித் தருவதாக ஆசை காட்டி, சிறுவனை தொழிற்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றான். பின்னர் பஸ்சில் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கடத்திச் சென்றான்.
இந்த குற்றச்செயலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்வோர் அலி (18) என்பவன் உடந்தையாக இருந்தான்.பின்னர் செல்போன் மூலம் அப்துல் ஹக்கை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள்,“உங்கள் மகன் வேண்டுமென்றால் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டும்” என்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அப்துல் ஹக் உடனடியாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் கடத்தல்காரரின் செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
பின்னர் போலீசார் மின்னல் வேகத்தில் பாலக்காட்டுக்கு விரைந்து சென்று, சுமார் 3 மணி நேரத்தில் சிறுவன் ஹூமாயூனை பத்திரமாக மீட்டனர்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் மற்றும் அன்வோர் அலி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இந்த துணிச்சலான போலீஸ் நடவடிக்கை காரணமாக, அன்னூர் – ஓரைக்கல்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Extortion 1point8 lakh Child kidnapped near Coimbatore by luring promise pani puri Police swift rescue 3 hours