"அடுப்பு எரிக்கும் பெண்களின் வயிற்றை எரிக்கும் சிலிண்டர் விலை'' - விஜயகாந்த் கண்டனம்..!!
DMDK Vijayakanth condemned hike in gas cylinder prices
இந்தியா முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாட்டு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது.
தற்பொழுது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாக்கியுள்ளது.
சிலிண்டர் விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலை மீது சுமையை ஏற்றுவது நியாயமா..? ஏற்கனவே பெட்ரோல் டீசல் எரிபொருட்களின் விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து தமிழக மக்கள் பெருந்துயிருக்கு ஆளாகி அன்றாட செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டு இருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்துள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது.
இவ்வாறு மத்திய மாநில அரசுகள் நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. ஏழை நடுத்தர வர்க்கத்து மக்களை பற்றி துளி அளவும் சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிலிண்டர் விலை உயர்வு அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய செய்கிறது" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
DMDK Vijayakanth condemned hike in gas cylinder prices