முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க புதிய ஏற்பாடு - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.!
chief election officer sathya pratha sahu press meet
தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்களில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள். 76 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். இந்த தேர்தலில், 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தேர்தலை முன்னிட்டு, 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 3.3 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். 1.3 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
44,801 வாக்கு பதிவு மையங்களில் வெப் கேமிரா நிறுவப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக, வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.173.85 கோடிக்கு ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 1.58 லட்சம் மின்னணு இயந்திரங்கள் வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்படும். காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க ஏதுவாக, டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை கொண்டு சென்று வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 1950- என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
chief election officer sathya pratha sahu press meet