சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம், கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு.!
chennai kodunkaiyur police attack for no face mask in kodunkaiyur
சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அந்த காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். 31 வயதான இவர் தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், இவர் அருகிலுள்ள ஃபார்மசி ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு அப்துல் ரஹீம் தனது பணி முடிந்து வீடு திரும்பிய போது, எம் ஆர் ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இவரை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், சைக்கிளில் வந்ததால் மூச்சு வாங்கியது., உங்களை பார்த்ததும் நான் முக கவசம் அணிந்துவிட்டேனே என்று அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார், எங்களை பார்த்த பிறகுதான் நீ முக கவசத்தை அணிந்து இருக்கிறாய், அதனால் அபராதம் கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் போலீசாருக்கும் அப்துல்ரஹீம்.,க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சமூக விரோதிகளை உங்களால் பிடிக்கத் துப்பில்லை., சட்டக் கல்லூரி மாணவனான என்னை ஏன் பிடிக்கிறீர்கள்? என்று அப்துல்ரஹீம் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
இதனால் போலீசார் அப்துல் ரஹீமை தாக்கி, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அப்துல் ரஹீமை போலீசார் கைது செய்து, இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக அப்துல் ரஹீம் கண் பக்கத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டு உள்ளது. மேலும் அவருடைய தொடைகளில் லத்தியால் அடித்தற்கான அடையாளங்கள் உள்ளது.
இதனையடுத்து காவல் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் மாணவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட நிகழ்வில் பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
English Summary
chennai kodunkaiyur police attack for no face mask in kodunkaiyur