அரசியலை விட்டு விலக சொல்லி அதிகாரிகள் மிரட்டுகின்றனர் - அமர் பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு .!
chennai high court postponed amar prasath reddy bail
சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக அனுமதி இல்லாமல் பிரம்மாண்ட கொடி கம்பம் நிறுவப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையடுத்து கடந்த அக்டோபர் 20-ந் தேதி இரவு பாஜகவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பிரச்சினை உருவானது.
இந்த கொடி கம்பத்தை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியபோது பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இவர்களில் அமர் பிரசாத் ரெட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பர பதாகைகளை சேதப்படுத்தி பிரதமர் மோடி படம் ஒட்டியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது, தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது அரசு அதிகாரிகளுடன் மோதியது உள்ளிட்ட பல வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே அமர் பிரசாத் ரெட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தம்மை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்பதைத் தடுக்கவே தன்னை கைது செய்துள்ளனர்.
புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. 500 கைதிகளுக்கு ஒரு சமையல் அறை என்று இருக்க வேண்டும். ஆனால் 2910 கைதிகளுக்கு ஒரு சமையல் அறைதான் உள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இந்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
English Summary
chennai high court postponed amar prasath reddy bail