பட்டப்பகலில் பா.ஜ.க. பிரமுகர் கொலை! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!
BJP supporter killed
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசன்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கம்மங்காடு என்ற கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டிருந்தார். செல்வராஜ் விவசாயம் செய்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் எனக்கூறி அப்பகுதியை அர்ஜூன் என்பவர் அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு செல்வராஜ் குடும்பத்தினர் அவர்கள் பயிரிட்ட நெற்கதிர்களை அறுவடை செய்வதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த அர்ஜூன் தலைமையில் மதுபோதையில் வந்த ஒரு கும்பல் செல்வராஜை அறுவடை செய்யவிடாமல் தகராறு செய்துள்ளனர்.
அப்போது அருகில் நின்ற செல்வராஜ் மகன் செல்வவிநாயகத்தின் பின்தலையில் அர்ஜுன் அடித்துள்ளார். அடி பலமாக விழுந்ததால் செல்வவிநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்வவிநாயகம் பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் கொடூர தாக்குதலில் செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் செல்வராஜ் வளர்த்த ஆடுகளையும் கொன்று புதைத்துள்ளனர். இதை யடுத்து அர்ஜூன் தலைமையிலான கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அர்ஜுன் மீது பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த செல்வவிநாயகத்தின் உறவினர்கள், அர்ஜூன் தலைமையிலான கும்பலை உடனடியாக கைது செய்ய கோரி அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் சமாதானப்படுத்தி கொலையில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.