புதிய கட்சி தொடங்க அஸ்திவாரம் போடும் அண்ணாமலை? நெல்லையில் திரண்ட அண்ணாமலை ஆதரவாளர்கள்! திடீர் ஆலோசனை! பீதியில் நயினார்!
Annamalai laying the foundation for starting a new party Annamalai supporters gathered in Nellai Sudden consultation
நெல்லையில் இன்று நடைபெற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நற்பணி மன்றக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பொறுப்பாளர் பதவியை அவர் மறுத்துள்ள நிலையில், இது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தின் அரவக்குறிச்சியைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தனது உயரிய ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் தமிழக அரசியலில் அதிரடி பாணியில் செயல்பட்டு, குறுகிய காலத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கியது. ஆனால் அந்தத் தேர்தலில் கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில்தான், 2023 செப்டம்பர் 25 அன்று அதிமுக, பாஜக கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தது. இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என உறுதியாக தெரிவித்தார்.
பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கிடையில், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த கூட்டணிக்கான முக்கிய நிபந்தனையாக, பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நிறைவேறாததால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சமீபத்தில் வழங்கப்பட்ட ஆறு மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியையும், “தந்தையின் உடல்நலத்தை கவனிக்க வேண்டும்” என்ற காரணம் கூறி அண்ணாமலை நிராகரித்தார்.
இந்த முடிவுக்கு சில மணி நேரங்களுக்குள்ளேயே, கடந்த ஆறு மாதங்களாக செயல்பாடின்றி இருந்த அண்ணாமலை நற்பணி மன்றம் மீண்டும் உயிர்ப்பெற்றது. நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். “அண்ணாமலை எடுக்கும் எந்த முடிவிற்கும் தோள் கொடுப்போம்” என்ற தீர்மானம் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக தலைமை தன்னைப் புறக்கணிப்பதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருதுவதாகவும், அதனால் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற கருத்தும் கூட்டத்தில் வெளிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டமான நெல்லையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது, தமிழக பாஜகவுக்குள் நிலவும் உட்கட்சிப் பிளவை வெளிப்படையாக காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அண்ணாமலை நற்பணி மன்றத்தின் இந்தக் கூட்டம், தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகும் அறிகுறியா? அல்லது பாஜக தலைமையை அழுத்தம் கொடுக்கும் ஒரு அமைப்பாக மட்டுமே தொடருமா? என்ற கேள்விகளுடன், அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் முடிவுகளை தமிழக அரசியல் களம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
English Summary
Annamalai laying the foundation for starting a new party Annamalai supporters gathered in Nellai Sudden consultation