ஒடிசா ரயில் விபத்து.. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.. விபத்து குறித்து விசாரணை நடத்துக.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.!
Anbumani urged to investigate coromandel train accident
ஒடிசாவில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததோடு விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு இரங்கல் : விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக!
ஒதிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி உள்ளிட்ட மூன்று தொடர்வண்டிகள் உள்ளிட்ட 3 தொடர்வண்டிகள் ஒரே இடத்தில் தடம் புரண்டு மோதிக்கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களில் 88 பேரும், காயமடைந்தவர்களின் 500-க்கு மேற்பட்டோரும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தை ஏற்படுத்துகிறது. விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்" என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
English Summary
Anbumani urged to investigate coromandel train accident