அமராவதி ஆற்றங்கரை வரலாற்று கோவில்கள் - மாணவர்கள் ஆய்வு..!
amaravathi river temple college students reaserch
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றங்கரையில், காலம் கடந்த மிக பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது. இங்குள்ள கோவில்கள் மற்றும் கல்வெட்டு குறித்து பழனியாண்டவர் பண்பாட்டு கல்லூரியைச் சேர்ந்த வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அப்பகுதிக்கு ஆய்வு பயணம் செய்தனர்.
இதையடுத்து, பேராசிரியர்கள் சித்ரா மற்றும் மேகலா தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு மாணவர்கள், அங்குள்ள ஐவர் மலை, மதகடிபுதூர் பாறை ஓவியங்கள், கொழுமம் வீரசோழீஸ்வரர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் மதியழகன், ஐவர் மலையில் சமணர்களின் வழிபாடு குறித்தும், 16 தீர்த்தங்கரர்களின் வாழ்விடம் மற்றும் திரவுபதி வழிபாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.
அவரைத் தொடர்ந்து, வக்கீல் சத்தியவாணி சமணம் சார்ந்து இருந்த அப்பாண்டையர் மலை தற்போது பாண்டவர் மலையாகவும் காலப்போக்கில் ஐவர் மலை என்றும் வழக்கில் மாறி இருப்பதையும் வீரநாராயணப் பெருவழி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி பேசினார். அதன் பின்னர் கொமரலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, சித்திரமேழி ஏர், பாறை ஓவியங்கள் குறித்து பேசினார்.
மாணவர்களுக்கு மதகடிபுதூர் பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் விஜயலட்சுமி விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து, கடத்தூரில் உள்ள சித்திரமேழி பெரிய நாட்டார் கல்வெட்டு சிறப்புகளையும், அங்கு கோட்டைகள் இருந்தது, கரை வழி நாட்டு கடத்தூர் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், கடத்தூர் மருதீசர் கோவிலில் உள்ள 84 கல்வெட்டு மற்றும் அதன் செய்திகள் குறித்து விளக்கி வரலாற்று ஆய்வாளர்கள் பேசினர். இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் செய்திருந்தனர்.
English Summary
amaravathi river temple college students reaserch