மருமகனை உருட்டு கட்டையால் தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர்! போலீசார் விசாரணை!
admk attacked son in law
கோயம்புத்தூர், பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 50). வெள்ளம் பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவரான இவர் அதிமுக பிரமுகராவார்.
இவரது மகள் மெய்மொழி (வயது 28) இவர் பழனி கவுண்டன் புதுவைச் சேர்ந்த பிரகாஷ்குமார் (வயது 24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். பிரகாஷ் குமார் வெளியே சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் குமார் மனைவியை தாக்கியுள்ளார்.
இது குறித்து மெய்மொழி அவரது தந்தை முருகவேலுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக மகளின் வீட்டிற்கு சென்று பிரகாஷ் குமாரிடம் எதற்காக மகளை தாக்கினாய் என கேட்டுள்ளனர்.
இதில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மாமனார், மாமியார் இருவரையும் பிரகாஷ்குமார் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து பிரகாஷ் குமாரின் தலையில் தாக்கியதால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கினார்.
பின்னர் அவர்களே பிரகாஷ்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் இது குறித்து கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மருமகனை தாக்கிய அ.தி.மு.க முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.