சிஎஸ்கே பவுலிங்கில் கவலை வேண்டாம்! அந்த 3 பேரை பாக்கலையா? – ரசிகருக்கு அஸ்வின் பதில்!
Donot worry about CSK bowling did you see those 3 guys Ashwin reply to the fan!
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மீண்டும் கம்பேக் கொடுக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறிய சிஎஸ்கே, அதற்குப் பிறகு அணியின் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்து வருகிறது.
தோல்விக்குக் காரணமான சில சீனியர் வீரர்களை விடுவித்த சென்னை அணி, இளம் வீரர்களை மையமாகக் கொண்டு புதிய பாதையில் பயணிக்க தொடங்கியது. அதன் பயனாக கடந்த சீசனிலேயே ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி, பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்களாக தங்களை நிரூபித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு டிரேடிங் முறையில் அனுப்பி, சிஎஸ்கே சஞ்சு சாம்சனை அணியில் இணைத்தது. இதன் மூலம், விரைவில் ஓய்வு பெற உள்ள எம்.எஸ். தோனிக்கு மாற்றாக, தரமான விக்கெட் கீப்பரை சிஎஸ்கே பெற்றுள்ளது என்றே கூறலாம். அதோடு, ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஷார்ட்டை வாங்கி, டாப் ஆர்டர் பேட்டிங்கையும் பலப்படுத்தியுள்ளது.
லோயர் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர் கார்த்திக் சர்மா, ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர் பிரசாந்த் வீர் ஆகியோரை மொத்தம் ரூ.28.40 கோடிக்கு வாங்கியுள்ள சிஎஸ்கே, அணியின் ஆழத்தையும் வலுப்படுத்தியுள்ளது. வேகப்பந்து வீச்சில் நியூசிலாந்து வீரர்கள் மாட் ஹென்றி, ஜாக் போல்க்ஸ் ஆகியோரை சேர்த்துள்ள நிலையில், ஸ்பின் துறையில் ஏற்கனவே உள்ள நூர் அஹ்மதுடன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைனும் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு சிஎஸ்கே ரசிகர், “சிஎஸ்கே அணியின் பிரச்சனை பேட்டிங்கில் இல்லை, பவுலிங்கில்தான்” என்று கவலையுடன் ட்வீட் செய்தார். இதற்கு இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக பதிலளித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
அஸ்வின் தனது பதிலில், “நீங்கள் நாதன் எலிஸ் மற்றும் அகில் ஹொசைன் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கவில்லையா? அவர்களுடன் நூர் அஹ்மதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நாதன் எலிஸ் 2025/26 பிக் பாஷ் தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2025/26 எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக அகில் ஹொசைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் நூர் அஹ்மத் கிட்டத்தட்ட ஊதா தொப்பியை வெல்லும் அளவுக்கு சிறப்பாக பந்து வீசி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தார். இந்த மூன்று தரமான பவுலர்கள் அணியில் இருக்கும் போது, பவுலிங் குறித்து கவலை வேண்டாம் என ரசிகர்களுக்கு அஸ்வின் தெம்பூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், சமநிலையான பேட்டிங் மற்றும் பவுலிங் அணியாக உருவாகியுள்ள சிஎஸ்கே, 2026 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Donot worry about CSK bowling did you see those 3 guys Ashwin reply to the fan!