வித்தியாசமான உண்டியல்.. பேரன்களுடன் காட்சிதரும் விநாயகர்.. அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில்.!
Today special Ambe Ma Amman vinayagar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி என்னும் ஊரில் அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
பனஸ்கந்தாவிலிருந்து சுமார் 82 கி.மீ தொலைவில் உள்ள அம்பாஜி என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இது 3 டன் எடையில் (3 ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் செம்பால் செய்யப்பட்ட 10 அடி நீளமுள்ள வித்தியாசமான உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.
பொதுவாக அம்பிகை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்ந்திருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், இத்திருக்கோயிலில் உண்மையான அம்மன் சிலை இல்லை. விஷயந்திரம் என்ற யந்திரமே வழிபாட்டில் உள்ளது. இந்த யந்திரத்தை ஒரு மார்பிள் பிளேட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரித்துள்ளனர்.
இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதனை ஸ்ரீயந்திரம் என்று சொல்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
இங்கு விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது விசேஷம். விநாயகருக்கு வடமாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்படுவதில்லை.
இங்கு அம்மன் சன்னதியின் எதிரில் ஒரு பள்ளமான இடத்தில் நாகேஸ்வரர், அனுமான், நாகராஜர் சிலைகள் உள்ளன.
இக்கோயிலின் சன்னதி அளவில் சிறியது தான். ஆனால், மண்டபமும், பிரகாரமும் பளிங்குக் கற்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி விழா இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பிறந்த நாளுக்கு மறுநாள் இங்கு வந்து ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால், காலமெல்லாம் அக்குழந்தை செல்வச் செழிப்புடனும், கிருஷ்ணனைப் போல் விவேகத்திலும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
English Summary
Today special Ambe Ma Amman vinayagar temple