மிகச்சிறிய லிங்கம்..பரசுராம தீர்த்தம்.. குவளைக்கே அபிஷேகம்.. அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில்.!
Today special alanthuraiyar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் என்னும் ஊரில் அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
அரியலூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனுக்கு சாம்பிராணி தைலம் பூசப்படுகிறது.
இத்தலத்தில் லிங்கம் மிகச்சிறியதாக இருப்பதனால் அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடைபெறும்.
பொதுவாக சிவதலங்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்தில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன.
இங்கு அம்பாளுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது.
அர்த்தமண்டப சுவரையொட்டி காலசம்காரர், அர்த்தனாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோருடைய உருவங்கள் அழகாக காட்சியளிக்கின்றன.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம் இதுவாகும்.
கோயில் எதிரில் குளம் உள்ளது. இது பரசுராமர் உருவாக்கிய குளம் என்பதால் இதற்கு 'பரசுராம தீர்த்தம்" என்ற பெயர் உண்டு.
இக்கோயிலில் விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் அமைக்கப்பட்டு இருப்பது மிகச்சிறப்பாகும்.
திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 55வது தலம் ஆகும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இக்கோயிலில் பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பரசுராம தீர்த்தத்தில் நீராடியும், சிவனுக்கு அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special alanthuraiyar temple