தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?
Suba mugoortham in Agni natchathiram
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கி உள்ளது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால், வருவோருக்கு அசௌகரியமாக இருக்கும் என்பதால் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
தற்காலத்தில், உஷ்ணத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல நவீன வசதிகள் வந்துவிட்டதால், சுபகாரியங்கள் நடத்துவோருக்கும், கலந்துகொள்வோருக்கும் அசௌகரியம் எதுவும் ஏற்படுவதில்லை. எனவே, அக்னி நட்சத்திரத்திலும் சுபகாரியங்களை நடத்துகின்றனர்.
சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன்படி சூரியனின் அதி உச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களை செய்ய வேண்டாம் என்று நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை:
வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல்
பூமி பூஜை செய்வது
விவசாய விதைப்பு வேலைகள்
மரம் வெட்டுதல்
குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல்
கிரகப்பிரவேசம்
பந்தல்கால் நடுவது
தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வது போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்:
திருமணம்
நிச்சயதார்த்தம்
சீமந்தம்
பெண் பார்த்தல்
கட்டிய வீட்டில் குடிபுகுதல்
வாடகை வீடு மாறுதல்
உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
English Summary
Suba mugoortham in Agni natchathiram