இன்று ஆடி முதல் செவ்வாய்... இதுதான் விஷேசமே... மறந்திடாதீங்க...!!
aadi vevvay
ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கூழ் வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுதல் என பெண்கள் பக்தி மயமாக காட்சியளிப்பார்கள்.
இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு முழுக்க, முழுக்க அம்மன் வழிபாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். குறிப்பாக ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும்.
ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைப்பெறும்.
ஒளவையார் விரதம் :
பெண்கள் ஆடி மாத செவ்வாயன்று ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது குறிப்பிட்ட நாளில் இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.
இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள். இவ்விரத்தில் ஆண் குழந்தைகள், ஆண்களையோ கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.
குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.
பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குப்பெறுவது நல்லது.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.